பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் 18ம் தேதி பதவியேற்பு
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் 18-ம் தேதி பதவியேற்கிறார். #ImranKhan
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கடந்த 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க 137 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற அந்த கட்சி நடவடிக்கை எடுத்தது. இதைத்தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டது.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஆகஸ்டு 11-ந் தேதி, தான் பதவியேற்க இருப்பதாக இம்ரான்கான் அறிவித்தார். இதற்கிடையே நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியாக இணைந்து செயல்பட நவாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல். (நவாஸ்) கட்சியும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் முடிவு செய்துள்ளன. இரு கட்சிகளும் முறையே 64, 43 இடங்களுடன் வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பதால், இம்ரான்கானுக்கு மிகப்பெரும் சவால் காத்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
இப்போது பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் 18-ம் தேதி பதவியேற்கிறார் என்று அவருடைய கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.