ஆப்கானிஸ்தானில் அதிரடி நடவடிக்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் அதிரடியாக நடவடிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் பலியாகினர்.

Update: 2018-10-11 22:30 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, பல இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால்பதித்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நங்கர்ஹார் மாகாணத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைகளுக்கு உளவுத்தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் சிறப்பு படை, அங்கு நேற்று முன்தினம் சென்று அதிரடியாக நடவடிக்கையில் இறங்கியது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாக நங்கர்ஹார் மாகாண கவர்னர் அத்தவுல்லா கோக்யானி கூறினார்.

இந்த தாக்குதலின்போது, ஆப்கானிஸ்தான் விமானப்படை உதவிகள் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நங்கர்ஹார் மாகாணத்தில் பல நாச வேலைகளை செய்வதற்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வந்ததாக தெரியவந்த நிலையில்தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கவர்னர் அத்தவுல்லா கோக்யானி கூறினார்.

இந்த தாக்குதலின்போது படையினருக்கோ, பொது மக்களுக்கோ எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்