ஆப்கானிஸ்தானில் குண்டு வீச்சு: 14 தலீபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வீச்சில், 14 தலீபான் பயங்கரவாதிகள் பலியாயினர்.

Update: 2018-11-20 23:15 GMT
மஷார் இ ஷெரீப்,

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் தலீபான் பயங்கரவாதிகள் ஒரு பக்கம் சமரச பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு தாக்குதல்கள் நடத்தி வருகிற நிலையில், அதற்கு எதிராக ராணுவமும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு பால்க் மாகாணத்தில் சார்போலாக், பால்க் மாவட்டங்களில் பதுங்கி உள்ள தலீபான் பயங்கரவாதிகளை குறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் கடும் குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 24 மணி நேரத்தில் நடந்த குண்டுவீச்சில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதை ஆப்கானிஸ்தான் வடக்கு பிராந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனீப் ரேசாய் உறுதி செய்தார்.

மஷார் இ ஷெரீப் நகரத்தில் இருந்து தொலைபேசி வழியாக பேசிய அவர் ராணுவம் நடத்திய தாக்குதலின்போது 3 பயங்கர வாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். தலீபான் பயங்கரவாதிகளை அங்கு முழுமையாக ஒழிக்கிறவரையில் தாக்குதல்கள் தொடரும் என அவர் குறிப்பிட்டார். இதுபற்றி தலீபான் பயங்கரவாதிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.


மேலும் செய்திகள்