கசோக்கி கொலை: 'இளவரசரை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை' சவுதி அமைச்சர் கண்டிப்பு
கசோக்கி கொலை விவகாரத்தில் 'இளவரசர் சல்மானை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை' என சவுதி அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் தெரிவித்து உள்ளார்.
ரியாத்,
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பாக உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு குரல்கள் மற்றும் கண்டனங்கள் உள்ள நிலையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
இது குறித்து சவுதி அரேபிய வெளியுறவுதுறை அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் பிபிசியிடம் கூறும் போது,
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அபாயகரமானவை என்றும், அவை நடப்பதற்கு சாத்தியமேயில்லை.
இஸ்தான்புல்லில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கசோக்கியின் கொலையில் சவுதி இளவரசருக்கு எந்த பங்கும் இல்லை என்று குறிப்பிட்டார்.
கசோக்கியின் கொலையில் சல்மானுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்ததற்கு அடுத்த நாளில் சவுதி அமைச்சரின் இந்த மறுப்பு வெளியாகி உள்ளது.