ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஒருவர் சாவு; 750 பேர் காயம்

ஈரானின் தெற்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2018-11-26 20:21 GMT
டெஹ்ரான்,

ஈரானின் தெற்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 163 கி.மீ. தொலைவிலும், ஈரானின் சர்போல்-இ-சகாப் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கமானது கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடுமையாக உலுக்கியது. வீடுகள், வணிகவளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பலமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

பல இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் 716 பேர் காயம் அடைந்ததாக ஈரான் அரசு தகவல் வெளியிட்டது.

மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் மீட்புகுழுவினர் குவிக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் இந்த நிலநடுக்கம் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள கலார் நகரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. அங்கு இந்த நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியானார். மேலும் 43 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்