உலகைச்சுற்றி...

துருக்கியில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்தது.

Update: 2018-12-07 22:30 GMT
* ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு, அந்த நாட்டு படைகள் எடுத்த அதிரடி நடவடிக்கையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஹெராத் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆப்கானிஸ்தான் படையினர் 14 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் கடத்திச் செல்லப்பட்டனர்.

* ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக உள்ள நிக்கி ஹாலே பதவி விலகுவதால், அவரது இடத்துக்கு அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

* கப்பலில் இருந்து ஏவி தாக்குதல் நடத்தும் எஸ்.எம்-2 என்ற அதிநவீன ஏவுகணைகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க தென் கொரியா முடிவு எடுத்துள்ளது.

* துருக்கியில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்தது. இதில் தொடர்புடையவர்கள் மீது அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், படை வீரர்கள் 41 பேரை கைது செய்வதற்கு பிடிவாரண்டு பிறப்பித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

* சீனாவின் ஜியுகுவான் செயற்கை கோள் ஏவும் மையத்தில் இருந்து சவுதி அரேபியா 2 செயற்கை கோள்களை நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. தாழ்வான சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் பரப்பை உயர்ந்த தரத்துடன் படம் எடுத்து வழங்கவும், நகர்ப்புற அமைப்பு திட்டமிடலுக்கும், பூமி கிரகத்தின் மாற்றங்களை கண்காணிக்கவும் இந்த செயற்கை கோள்கள் பயன்படுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

* அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சி.என்.என். டெலிவிஷன் நிறுவன அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையொட்டி, அந்த அலுவலகத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு சோதனை நடந்தது. அதில் வெடிகுண்டுகளோ, வெடிபொருட்களோ கண்டுபிடிக்கப்படவில்லை.


மேலும் செய்திகள்