ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்; 12 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மற்றும் போலீஸ் பயிற்சி மையம் மீது தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 17 வருடங்களுக்கும் மேலாக தலீபான் தீவிரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் அரசு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நீண்ட காலம் நடந்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், தீவிரவாதிகள் தங்களது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்நாட்டின் வார்டாக் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ தளம் மீது, காரில் வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு வந்த தற்கொலை தீவிரவாதி அதனை வெடிக்க செய்துள்ளான். இந்த முதல் தாக்குதலை தொடர்ந்து அங்கு ஊடுருவிய பிற தீவிரவாதிகள், ராணுவ தளம் மற்றும் போலீஸ் பயிற்சி மையம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பதிலடியாக ஆப்கானிய படையினர் நடத்திய தாக்குதலில் 2 தலீபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று தலீபான் தீவிரவாத அமைப்பினர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.