அமெரிக்காவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டு கொன்ற இளைஞர்

அமெரிக்காவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டு கொன்று தப்பிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-01-27 02:04 GMT
ஹூஸ்டன்,

அமெரிக்காவின் தென்கிழக்கே லூசியானாவில் கொன்சாலெஸ் நகரில் வசித்து வந்தவர்கள் எலிசபெத் தேரியட் மற்றும் கெய்த் தேரியட்.  51 வயது நிறைந்த இந்த தம்பதியின் மகன் டகோட்டா தேரியட் (வயது 21).

இந்த நிலையில், டகோட்டா தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.  இதில் அவர்கள் படுகாயமடைந்து உள்ளனர்.  இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அவர்களை சுட்டது டகோட்டா என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், டகோட்டாவின் பெற்றோர் உயிரிழந்து விட்டனர்.  இதேபோன்று அருகே உள்ள மற்றொரு பகுதியில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.  அவர்கள் பில்லி எர்னெஸ்ட் (வயது 43), டேனர் எர்னெஸ்ட் (வயது 17) மற்றும் சம்மர் எர்னெஸ்ட் (வயது 20) என தெரிய வந்துள்ளது.  இவர்களில் ஒருவர் டகோட்டாவின் காதலி என கூறப்படுகிறது.

இந்த கொலைகளை செய்து விட்டு டகோட்டா மிஸ்ஸிசிப்பி நகருக்கு தப்பி சென்று உள்ளான் என கூறப்படுகிறது.  தொடர்ந்து போலீசார் டகோட்டாவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்