புல்வாமா தாக்குதல்: கண்டனம் தெரிவித்து நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெல்லிங்டன்,
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர். இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் நியூசிலாந்தில் இன்று பாராளுமன்றம் கூடியதும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேசிய துணை பிரதமர் பீட்டர்ஸ் , பயங்கரவாதத்தால் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்து இருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என தெரிவித்தார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் இந்தியர்களுக்கும் நியூசிலாந்து மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்வதாகவும் பீட்டர்ஸ் பேசினார்.
மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவிற்கு தங்கள் ஒருமைப்பாட்டை தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.