பாகிஸ்தானை கண்டித்து இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் போராட்டம்
பாகிஸ்தானை கண்டித்து இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியூயார்க்,
காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த கோழைத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்த இந்தியா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில், நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகம் முன் குவிந்த நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர், பாகிஸ்தானுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். சிக்காகோவிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.