அமெரிக்காவில் கடும் சூறாவளி தாக்குதல்; குழந்தைகள் உள்பட 14 பேர் பலி
அமெரிக்காவில் வீசிய கடும் சூறாவளி காற்றில் சிக்கி குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகி உள்ளனர்.
ஜார்ஜியா,
அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமாவில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. மரங்கள் சாய்ந்தன.
இதுபற்றி தகவலறிந்து 20க்கும் மேற்பட்ட பேரிடர் நிவாரண படையினர் உடனடியாக அங்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூறாவளியானது ஜார்ஜியா, தெற்கு கரோலினா மற்றும் புளோரிடா ஆகிய நகரங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதில் 14 பேர் பலியாகி உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் குழந்தைகளும் உள்ளனர். சிலரை காணவில்லை. இந்த எண்ணிக்கை உயர கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து காயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரங்களில் பல வீடுகள் இடிந்து விழுந்தும், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தும், கார்கள் புரண்டும் கிடக்கின்றன. மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து காணப்படுகின்றன. மின்கம்பங்களும் சாய்ந்து உள்ளன. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.