லிபியாவில் ஆயுத மோதலில் பலி எண்ணிக்கை 220 ஆக உயர்வு; உலக சுகாதார நிறுவனம் தகவல்

லிபியாவில் ஏற்பட்ட ஆயுத மோதலில் பலி எண்ணிக்கை 220 ஆக உயர்வடைந்து உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2019-04-20 11:43 GMT
லிபியா நாட்டில் ஆட்சி செய்து வந்த அரசுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டில் உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் அதிபர் முகமது கடாபி கொல்லப்பட்டார்.  இதனை தொடர்ந்து அரசு இரு குழுக்களாக பிரிந்து செயல்பட்டது.  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆதரவாக படை தளபதி கலீபா ஹப்தர் தலைமையிலான லிபிய தேசிய ராணுவம் நாட்டின் கிழக்கு பகுதியையும், ஐ.நா. மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆதரவு பெற்ற இடைக்கால அரசு திரிபோலி பகுதியில் இருந்து மேற்கு பகுதியையும் ஆட்சி செய்து வருகின்றன.

இந்நிலையில், எதிர் தரப்பு அரசை சேர்ந்தவர்களை தீவிரவாதிகள் என குறிப்பிட்டு, அவர்களின் பிடியில் இருந்து திரிபோலி நகரை விடுவிக்க வேண்டும் என ராணுவத்துக்கு ஹப்தார் உத்தரவிட்டார்.  இதனால் கடந்த 4ந்தேதி உள்நாட்டு மோதல் ஏற்பட்டது.  இதன் முடிவில் திரிபோலி அருகே உள்ள சுர்மான் மற்றும் கார்யான் ஆகிய பகுதிகளை ராணுவம் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தது.  இதன்பின் கடந்த 7ந்தேதி ராணுவத்தின் மீது இடைக்கால அரசு பதில் தாக்குதல் நடத்தியது.

இந்த மோதல் சம்பவங்களில் பலி எண்ணிக்கை 220 ஆக உயர்வடைந்து உள்ளது.  1,060 பேர் காயம் அடைந்து உள்ளனர்.  இவர்களில் பலர் சுகாதார பணியாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர் என உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.) வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்