இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்; ராணுவ செயலர், காவல் துறை தலைவர் பதவி விலக இலங்கை அதிபர் வலியுறுத்தல்

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு ராணுவ செயலர், காவல் துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் வலியுறுத்தி உள்ளார். #Eastersundaybombings

Update: 2019-04-24 10:14 GMT
கொழும்பு,

இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமை தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது அன்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன.

இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தியதில் ஒரு பெண் உள்பட 9 தற்கொலை படையினர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்த சம்பவத்தினை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, குண்டுவெடிப்பு பற்றிய உளவு துறை தகவலை தனக்கு முன்பே தெரிவிக்கவில்லை.  தகவல் கிடைத்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பேன் என கூறினார்.

இலங்கை பாதுகாப்புத்துறை தலைவர்கள் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பிரிவு முற்றிலும் சீரமைக்கப்படும் என அவர் கூறியிருந்த நிலையில், இலங்கை ராணுவ செயலர், காவல் துறை தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்யும்படி இலங்கை அதிபர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்