பிரான்சில் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் காயம்
பிரான்சின் லியோன் நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 13 பேர் காயம் அடைந்தனர்.
லியோன்,
பிரான்சு நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான லியோன் நகரில் நேற்று மாலை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர். லியோன் நகரின் மையப்பகுதியில் விக்டர் ஹியூகோ வீதியில் மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக்குண்டுவெடிப்பு தொடர்பான ஒரு சந்தேக நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், வெடிகுண்டு அடங்கிய பார்சல் ஒன்றை, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மதிவண்டி ஒன்றில் வைத்ததாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு தாக்குதல் என்பதை பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு பயங்கரவாத தொடர்பு இருக்குமா? கோணத்திலும் விசாரணை நடப்பதாக பிரான்சு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து மக்கள் வெளியேற்றபட்டு பிரான்சு ராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.