ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதல்: 21 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில், 21 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

Update: 2019-06-01 23:00 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா 2001-ம் ஆண்டு படையெடுத்து அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை அகற்றியது. மக்களாட்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் தலீபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. அவர்கள் உள்நாட்டுப்படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கஜினி மாகாணத்தின் காராபாக் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உள்நாட்டுப்படைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை குறி வைத்து கடுமையான வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 21 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இதை உள்ளூர் ஊடகங்கள் நேற்று உறுதி செய்தன.

இதற்கிடையே தலீபான் பயங்கரவாதிகள் சண்டை நிறுத்தம் செய்வதற்கு அழைப்பு விடுப்பதற்கான வாய்ப்பு உடனடியாக இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அமெரிக்க அரசுக்கும் ஏற்கனவே 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இந்த தருணத்தில் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என தலீபான் அமைப்பின் தலைவர் ஹைபதுல்லா அகுன்த்ஜாதா தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சமரச பேச்சு வார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்