ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாத தாக்குதல் : 11 பேர் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-06-14 22:45 GMT

காபூல், 

நாட்டின் கிழக்கு பகுதியில் நங்கார்ஹார் மாகாணத்தில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜலாலாபாத் நகர், ஐ.எஸ். மற்றும் தலீபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதியாக இருக்கிறது.

அந்த நகரில் இருந்து பயங்கரவாதிகளை விரட்டியடிக்க நேட்டோ படை வீரர்களின் உதவியோடு, ஆப்கானிஸ்தான் படை போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜலாலாபாத் நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடிக்கு சென்ற தற்கொலை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. போலீஸ் சோதனை சாவடி வழியாக சென்ற அப்பாவி பொதுமக்களும் இந்த குண்டு வெடிப்பில் சிக்கினர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர்.

மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்