ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த பேச்சு வார்த்தையின் போது இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
ஒசாகா,
14 வது ‘ஜி 20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, இன்று அதிகாலை ஒசாகா நகரம் சென்றடைந்தார். ஒசாகா வந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், ஒசாகா நகரில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.