உலக தலைவர்களை சந்தித்த மோடி - புதினை கலாய்த்த டிரம்ப்

உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதனிடையே ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கலாய்த்த சம்பவம் நிகழ்ந்தது.

Update: 2019-06-28 23:00 GMT
ஒசாகா,

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் இடையே நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய ஒரு தொகுப்பு இது:-

* ‘ஜி-20’ உச்சி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒசாகாவில் போராட்டம் நடந்தது. இதில் பதாகைகளுடன் கலந்து கொண்டவர்கள் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பதவி விலக வேண்டும், டிரம்ப் அமெரிக்கா திரும்ப வேண்டும் என கோஷமிட்டனர்.

* பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்தார். இருவரும் புன்னகைத்தவாறு கட்டித்தழுவி, மிக இயல்பான முறையில் உரையாடினர்.

* ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரையும் மோடி சந்தித்தார்.

* தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு வர்த்தகம், மக்கள் இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

* ரஷியா, இந்தியா, சீனா முத்தரப்பு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டனர். முத்தரப்பு தலைவர்களின் கலந்துரையாடல், உலகளாவிய பிரச்சினைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது என மோடி குறிப்பிட்டார்.

* ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 3 நாடுகளும் மிகக்கடுமையான உலக, பிராந்திய பிரச்சினைகளை சமாளிப்பதில் ஒத்துழைத்து வருவதற்கு ரஷிய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்தார்.

* சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை மோடி சந்தித்து, இரு தரப்பு வர்த்தகம், முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

* அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணையும் நடந்தது. இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதினை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிரித்தவாறு தனக்கே உரித்தான பாணியில் வேடிக்கையாக, “அதிபர் அவர்களே, (அமெரிக்க) தேர்தலில் தலையிடாதீர்கள்” என்று வேடிக்கையாக கூறி கலாய்த்தார்.

மேலும் செய்திகள்