பாகிஸ்தானில் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

பாகிஸ்தானில் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-07-03 22:15 GMT

லாகூர்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் நேற்று காலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

விமான நிலையத்தில் உள்ள காத்திருப்பு அறையில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது அங்கிருந்த 2 நபர்கள் திடீரென சக பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. பயணிகள் அனைவரும் அலறிஅடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிர் இழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு படைவீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களை மடக்கி பிடித்து, போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் அல்ல, முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பது தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்