அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானம் குலுங்கியதால் பதற்றம் 37 பயணிகள் காயம்

அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானம் குலுங்கியதால் பதற்றம் 37 பயணிகள் காயம்

Update: 2019-07-12 22:45 GMT
ஒட்டாவா,

அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது நடுவானில் விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. 37 பயணிகள் காயம் அடைந்தனர்.

269 பயணிகள்

கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ‘ஏர் கனடா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 777-200’ ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 269 பயணிகளும், 15 ஊழியர்களும் இருந்தனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு மேலே, 36 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் பறந்துகொண்டிருந்தது.

நடுவானில் குலுங்கியது

அப்போது சற்றும் எதிர் பாராத வகையில் நடுவானில் விமானம் பயங்கரமாக குலுங்கியது. விமானம் பயங்கரமாக குலுங்கி, ஆட்டம் கண்டதால் பயணிகள் மத்தியில் என்னவோ, ஏதோ என பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.

அனைவரும் பயத்தில் அலறினர். தவித்தனர். பயணிகள் சிலர் ‘சீட் பெல்ட்’ அணியாமல் இருந்ததால் அவர்கள் முன் இருக்கைகள் மீதும், மேற்கூரையிலும் மோதி காயம் அடைந்தனர்.

அவசரமாக தரையிறக்கப்பட்டது

இதற்கிடையில் விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சீராக இயக்க விமானி முயற்சித்தார். ஆனால் விமானம் தொடர்ந்து, குலுங்கியபடி இருந்ததால் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் ஹவாயின் ஹோனாலுலு நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக்கூறி விமானத்தை அவசரமாக அங்கு தரையிறக்க அனுமதி கேட்டார்.

37 பேர் காயம்

அதற்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமான ஊழியர்கள், பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர்.

முன்னதாக நடுவானில் விமானம் குலுங்கியதில் 37 பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் 9 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.

அவர்கள் அனைவரும் ஹோனாலுலு நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமானியின் சாதுர்யம்

விமானி சாதுர்யமாக செயல்பட்டு, விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யும் வரை தங்குவதற்கு உள்ளூர் ஓட்டலில் வசதி செய்துதரப்பட்டது.

விமானம் நடுவானில் குலுங்கியது ஏன் என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்