பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது - சர்வதேச நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்தது, பாகிஸ்தான்

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டார். சர்வதேச நிர்ப்பந்தத்துக்கு பாகிஸ்தான் அடிபணிந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2019-07-17 23:30 GMT
லாகூர்,

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தினர். உலகையே அதிர வைத்த இந்த தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத் ஆவார்.

மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது.

மேலும், நீதியின் முன் நிறுத்துவதற்கு அவரைப்பற்றிய தகவல்களை அளிப்போருக்கு 10 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.70 கோடி) பரிசு அளிக்கப்படும் எனவும் கூறியது. இருப்பினும் அவரை கைது செய்ய பாகிஸ்தான் மறுத்து வந்தது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் தொடர்ந்து நிர்ப்பந்தங்கள் வந்ததைத் தொடர்ந்து ஹபீஸ் சயீத் மற்றும் அவரது லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா, பலாஹ் இ இன்சானியத் அறக்கட்டளை ஆகியவற்றின் மீது பயங்கரவாத தடுப்பு படையினர் விசாரணையை முடுக்கி விட்டனர்.

அதைத் தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களிலும் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது மொத்தம் 23 வழக்குகளை கடந்த 3-ந் தேதி பயங்கரவாத தடுப்பு படையினர் பதிவு செய்தனர். பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு அவர்கள் நிதி திரட்டினர் என்பதுதான் குற்றச்சாட்டு.

இந்த நிலையில், ஹபீஸ் சயீத் நேற்று லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா நகருக்கு சென்று கொண்டிருந்தார். அவரை வழியில் இடைமறித்து பயங்கரவாத தடுப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து அவர் குஜ்ரன்வாலா நகரில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

உடனடியாக அவர் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட லாகூர் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே சிறையில்தான் அல் அஜிசியா மில் ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன்முதலாக இம்ரான்கான் 21-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அவர் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுகிறார்.

அப்போது பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அவர் டிரம்பிடம் விளக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்