போராட்டம் மூலமாக ‘ஹாங்காங் மீள முடியாத படுகுழியில் தள்ளப்படும்’ நிர்வாக தலைவர் எச்சரிக்கை

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.

Update: 2019-08-14 00:15 GMT
ஹாங்காங், 

ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

இந்த நிலையில், போராட்டம் மூலமாக ஹாங்காங் மீண்டு வரமுடியாத படுகுழியில் தள்ளப்பட்டு விடும் என நிர்வாக தலைவர் கேரி லாம் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிகவும் உணர்ச்சிப்பெருக்குடன் இதனை அவர் கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “ஹாங்காங் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒரு நிமிடம் நமது நகரம், குடும்பம் எப்படி இருக்கிறது என்று சிந்தியுங்கள். உங்கள் போராட்டம் மூலம் இந்த நகரத்தை மீண்டு வரமுடியாத படுகுழியில் தள்ளிவிடாதீர்கள். இந்த நகரத்தை படுகுழியில் தள்ளத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? ஹாங்காங்கை பாதுகாப்பாகவும், சட்டம் மற்றும் ஒழுங்குடன் அமைதியாகவும் வழிநடத்துவதே எனது பணியாகும்” என்றார். அதே சமயம், “போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையான கைதிகள் பரிமாற்ற மசோதாவை முழுவதுமாக வாபஸ் பெறுவதற்கான தன்னாட்சி உங்களிடம் இருக்கிறதா?” என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கேரி லாம் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

மேலும் செய்திகள்