ரெயில் நிலையம், பல்பொருள் அங்காடிகளில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் கைது

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இளம்பெண்களை செல்போனில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்து, அதை இணையதளங்களில் வெளியிட்ட 53 வயதான நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-22 19:30 GMT
மாட்ரிட்,

கொலம்பியாவை சேர்ந்த அந்த நபர் ஒரு பைக்குள் தனது செல்போனை மறைத்து வைத்து, 550-க்கும் மேற்பட்ட பெண்களை தவறான முறையில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் 283 வீடியோக்களை ஆபாச இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். லட்சக்கணக்கானோர் அந்த வீடியோக்களை பார்த்துள்ளனர்.

அந்த நபர் சுமார் ஒரு வருடமாக தினந்தோறும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, இணையத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இவர் குறிப்பாக மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் அவர் மெட்ரோ ரெயிலில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தபோது, கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, நூற்றுக்கணக்கான வீடியோக்களுடன் ஒரு மடிக்கணினி மற்றும் ஹார்ட் டிரைவ்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஸ்பெயினில் பெண்களை ஆபாசமாக படம்பிடிப்பது, பாலியல் துன்புறுத்தலாக கருதப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அதிகபட்ச சிறை தண்டனை எதிர்கொள்வார்கள்.

மேலும் செய்திகள்