2 நாளில் சார்ஜாவில் 2வது சம்பவம்; கேரள சிறுமி கட்டிடத்தின் 6வது தளத்தில் இருந்து விழுந்து பலி
கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுமி ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள கட்டிடத்தின் 6வது தளத்தில் இருந்து விழுந்து பலியாகி உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சார்ஜா,
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் 6வது தளத்தில் இருந்து விழுந்து எம்.எப். என அறியப்படும் சிறுமி பலியாகி உள்ளார். அவருக்கு வயது 16.
கேரளாவை சேர்ந்த இவரது குடும்பம் இந்த கட்டிடத்தில் பல வருடங்களாக வசித்து வந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்பொழுது, கடந்த 2 மாதங்களாக இந்த சிறுமி மனநிலை பாதிப்படைந்து சார்ஜாவில் உள்ள கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கூறினர்.
தொடர்ந்து, அவருக்கு கடுமையான மனஅழுத்தம் இருந்துள்ளது என இறப்பு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், சிறுமியின் உறவினர் ஒருவர் கூறும்பொழுது, சிறுமி தலைவலிக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சம்பவத்திற்கு முதல் நாள் இரவு படுக்க செல்லும் முன் அதற்கான மருந்துகளை உட்கொண்டார் என கூறியுள்ளார்.
கடந்த வெள்ளி கிழமை சார்ஜாவின் கட்டிடமொன்றில் 10வது தளத்தில் இருந்து 15 வயது இந்திய சிறுமி கீழே விழுந்து உயிரிழந்து இருந்தது. இந்த இரு சம்பவங்களிலும், தற்கொலை முடிவு சந்தேகிக்கப்படுகிறது. இந்திய சிறுமிகள் 2 பேர் கடந்த 2 நாட்களுக்குள் சார்ஜாவில் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.