ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் - 6 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-12-11 14:09 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் பக்ரம் விமானப்படை தளம் உள்ளது. இங்குள்ள அமெரிக்க ராணுவத்தினரை குறிவைத்து இன்று மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. 

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ராணுவ படைத்தளத்திற்கு அருகே, உள்ளூர் மக்களுக்காக கட்டப்பட்டு வந்த மருத்துவமனை கட்டிடத்தின் முன்பாக வெடிகுண்டை வெடிக்க வைத்தான். இதனால் மருத்துவமனை கட்டிடம் உட்பட அருகில் இருந்த குடியிருப்புகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதனையடுத்து தாக்குதல் நடந்த இடத்தை அமெரிக்க ராணுவத்தினர் உடனடியாக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் பொது மக்கள் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், இதை தலீபான் அமைப்பினர் நிகழ்த்தியிருக்க கூடும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்