வங்காளதேசத்தில் பிளாஸ்டிக் ஆலையில் தீவிபத்து: 13 பேர் பலி
வங்காளதேசத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் பலியாகினர்.
டாக்கா,
வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு அருகே உள்ள கெரானிகன்ச் நகரத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று மதியம் எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய அனுமதி இன்றி அந்த தொழிற்சாலை இயங்கி வந்ததாக அந்நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆலையில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.