இங்கிலாந்தில் மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி நகைகள் கொள்ளை

இங்கிலாந்தில் மாடல் அழகியின் மாளிகையில் ரூ.470 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2019-12-17 23:00 GMT
லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த ‘பார்முலா 1’ குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பெர்னி எக்லெஸ்டோனின் மகள் தமரா எக்லெஸ்டோன் (வயது 35). இவர் பிரபல மாடல் அழகி ஆவார். இவருக்கு லண்டனின் கென்சிங்டன் நகரில் 55 அறைகளை கொண்ட ஆடம்பர சொகுசு மாளிகை உள்ளது. இங்கு அவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தமரா எக்லெஸ்டோன் தனது குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை பின்லாந்து நாட்டுக்கு சென்றார்.

அதனை அறிந்த கொள்ளையர்கள் 3 பேர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தமரா எக்லெஸ்டோனின் மாளிகைக்குள் புகுந்து, அவரது படுக்கையறையில் இருந்து சுமார் 50 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.470 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரம்) மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்து சென்றனர். தனது மாளிகையில் நகைகள் கொள்ளைபோனது தொடர்பாக மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமரா எக்லெஸ்டோனின் இந்த மாளிகையானது 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும். மேலும் மாளிகை அமைந்துள்ள வீதியில் காவலர்கள் இரவும், பகலும் ரோந்து பணியில் ஈடுபடுவதோடு, அங்கு பல சோதனை சாவடிகளும் நிறைந்துள்ளன. ஆனால் அத்தனை பாதுகாப்புகளையும் மீறி கொள்ளையர்கள் மாளிகைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்