பனாமா நாட்டில் சிறையில் கைதிகள் இடையே மோதல்; 12 பேர் பலி

பனாமா நாட்டில் சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் பலியாயினர்.

Update: 2019-12-18 22:32 GMT
பனாமா சிட்டி,

பனாமா நாட்டின் தலைநகர் பனாமா சிட்டியில் லா ஜொயிதா என்ற சிறைச்சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சிறையில் கைதிகள் இருதரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்தது. சிறைக்குள் கடத்திவரப்பட்ட துப்பாக்கிகளை கொண்டு கைதிகள் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டனர்.

இதனால் சிறைக்குள் பெரும் பதற்றம் உருவானது. இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. அதனைத் தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட கைதிகளை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.

அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் கைதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 12 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த மோதலில் சிறைக்காவலர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கைதிகள் யாரும் தப்பி ஓடவில்லை என்றும் அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்