இளவரசர் ஹாரி, மேகன் விவகாரம்: இங்கிலாந்து ராணி இன்று அவசர ஆலோசனை

இளவரசர் ஹாரி, மேகன் விவகாரம் தொடர்பாக, இங்கிலாந்து ராணி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2020-01-12 23:15 GMT
லண்டன்,

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளையமகன், இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக கடந்த புதன்கிழமை அதிரடியாக அறிவித்தனர்.

அவர்கள் இது தொடர்பாக ராணி இரண்டாம் எலிசபெத்தையோ, இளவரசர் சார்லஸ் உள்ளிட்டவர்களையோ கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்தது, சர்வதேச அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் பொருளாதார சுதந்திரத்தை பெறுகிற வகையில் முழு நேர பணிக்கு செல்லவும், தங்கள் சுய காலில் நிற்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். அவர்கள் இங்கிலாந்துக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையே தங்கள் காலத்தை கழிக்க விரும்புகின்றனர். இந்த நிலையில், அரச குடும்பத்துடனான இளவரசர் ஹாரி, மேகன் உறவு இனி எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ராணி இரண்டாம் எலிசபெத் நேரடியாக தலையிட்டு இணக்கமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளார். இதையொட்டி அவர் இன்று (திங்கட்கிழமை) நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில், அரச குடும்ப உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இளவரசர் ஹாரி, மேகன், இளவரசர் வில்லியமுடன் இளவரசர் சார்லஸ்சுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கனடாவில் உள்ள மேகன், இந்த கூட்டத்தில் தொலைபேசி வழியாக தனது கருத்தை தெரிவிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

இன்றைய கூட்டத்தில் அரச குடும்பத்தில் இனி ஹாரி, மேகன் தம்பதியரின் புதிய உறவு எப்படி அமையும் என்பது முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்