விஜய் மல்லையாவின் சொகுசு கப்பலை விற்க அனுமதி கோரி கதார் நிறுவனம் வழக்கு

விஜய் மல்லையாவின் சொகுசு கப்பலை விற்க அனுமதி கோரி கதார் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

Update: 2020-01-18 14:41 GMT
லண்டன்,

பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கத்தார் தேசிய வங்கியின் துணை நிறுவனமான அன்ஸ்பச்சர் நிறுவனம் லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையா மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது அன்ஸ்பக்சர் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“விஜய் மல்லையா ரூ.280 கோடி கடனை பெற்று பிரான்ஸ் நாட்டின் ‘லி செயிடன்ட் மார்கரெட்’ தீவில் ‘லீ கிராண்ட் ஜார்டின்’ என்ற பிரமாண்ட மாளிகையை வாங்கினார்.

அந்த சொகுசு பங்களாவில் 17 படுக்கை அறைகள், ஒரு சினிமா தியேட்டர், மதுபானக் கூடம், ஹெலிகாப்டர் தளம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.

இந்த சொகுசு மாளிகையை விஜய் மல்லையா பராமரிக்காமல் விட்டு விட்டார். இதன் காரணமாக அந்த சொகுசு பங்களாவின் மதிப்பு 30 சதவீதம் குறைந்து விட்டது.

இதனால் பங்களாவை விற்றாலும் கடன் தொகையை முழுவதும் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடனுக்கு உத்தரவாதமாக இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் சொகுசு கப்பலை விற்று, அந்த தொகையை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

விஜய் மல்லையாவின் சொகுசு கப்பலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் தராததால் அந்த கப்பலை காப்பீட்டு நிறுவனம் முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்