இந்தியாவுக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை - மலேசிய பிரதமர்

பாமாயில் இறக்குமதியை நிறுத்தும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-20 11:08 GMT
லங்காவி,

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அண்மையில் காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இதற்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இறக்குமதி தடையால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாமாயில் 2.8 சதவீதமாக உள்ளது. மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவீதம் பாமாயில் பங்களிப்பு உள்ளது.

மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கை, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளரான மலேசியாவுக்கு பெரும் சவாலை உருவாக்கும். ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா மலேசியாவின்  சிறந்த சந்தையாக உள்ளது. இதனால் மலேசியா பொருளாதார ரீதியில் பலத்த பாதிப்பை சந்தித்து வருகிறது. 

இதுகுறித்து லங்காவியில் நிருபர்களை சந்தித்த மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், சிறிய நாடான எங்களால் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க இயலாது என்றும், இந்த பிரச்சினையை தீர்க்க வழிகளை ஆராய்ந்து வருகிறோம்.

ஜாகீர் நாயக் மீது இந்திய அரசு ஒரு நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளித்தாலும், நடவடிக்கையின் உண்மையான அச்சுறுத்தலை நாயக் எதிர்கொள்கிறார்.  அவர் பாதுகாப்பாக இருக்க  மூன்றாவது நாட்டைக் கண்டுபிடிக்க முடிந்தால் மட்டுமே மலேசியா, ஜாகீர் நாயக்கை இடமாற்றம் செய்யும் என கூறினார்.

மேலும் செய்திகள்