ரஷ்யாவில் மர வீட்டில் தீ விபத்து; 11 பேர் பலி
ரஷ்யாவின் சைபீரியா நகரில் மர வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ளனர்.
சைபீரியா,
ரஷ்யாவின் சைபீரியா நகரில் டோம்ஸ்க் பகுதியில் பிரிசுலிம்ஸ்கை என்ற கிராமத்தில் ஓரடுக்கு கொண்ட மரக்கட்டைகளை கொண்டு கட்டப்பட்ட வீடு ஒன்று உள்ளது. இதில் 14 பேர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவில் திடீரென இதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்தவர்களில் 2 பேர் வெளியேறி தப்பி விட்டனர். 11 பேர் தீயில் சிக்கி பலியாகி உள்ளனர். மற்றொருவரின் நிலைமை பற்றி தெரியவில்லை.
இந்த தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. எனினும் குற்ற வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. பலியானவர்களில் 5 பேர் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என அந்நாட்டின் அவசரகால அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.