அமெரிக்காவில் வீட்டில் தீப்பிடித்து 6 குழந்தைகளுடன் பெண் சாவு

அமெரிக்காவில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 6 குழந்தைகளுடன் பெண் உயிரிழந்தார்.

Update: 2020-02-09 22:45 GMT
நியூயார்க், 

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் கிளின்டன் நகரை சேர்ந்தவர் பிரிட்டானி பிரெஸ்லி (வயது 33). பள்ளி ஆசிரியையான இவர் தனது கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் அங்குள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரிட்டானி பிரெஸ்லி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் பிரிட்டானி பிரெஸ்லியும், அவரது 6 குழந்தைகளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 1 வயதான பச்சிளம் குழந்தையும் அடங்கும்.

பிரிட்டானி பிரெஸ்லியின் கணவர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். வீட்டில் எப்படி தீப்பிடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை.

மேலும் செய்திகள்