ஏமனில் இருந்து சவுதி அரேபியாவின் நகரங்களை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகள் தடுத்து நிறுத்தம்
ஏமனில் இருந்து தனது நகரங்களை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகளை சவூதி அரேபியா தடுத்து நிறுத்தியது.
கெய்ரோ
சவுதி அரேபியாவின் நகரங்களை குறிவைத்து சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து அரபு கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மாலிகி கூறியதாவது:-
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றது. ஈரானிய ஆதரவுப்பெற்ற ஹவுத்தி போராளிகள் ஏமன் தலைநகர் சனாவிலிருந்து சவுதி அரேபியாவின் நகரங்களை குறிவைத்து பல ஏவுகணைகளை ஏவி உள்ளனர்.
எனினும், சவுதி அரேபியாவின் வான்வெளி பாதுகாப்பு படைகள் அதை தடுத்து நிறுத்தி நடுவானில் அழித்தன. இந்த ஏவுகணைகள் சவுதி அரேபியாவில் உள்ள நகரங்களையும் பொதுமக்களையும் குறிவைக்கும் நோக்கில் திட்டமிட்டு ஏவப்பட்டன. இந்த தாக்குதல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று கர்னல் துர்கி அல்-மாலிகி விவரித்தார்.
ஹவுத்திகள் இதுவரை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.