உலக அளவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்ததால் சோகம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
பாரிஸ்,
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது. பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது 183 நாடுகளில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடிய வைரசால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் கொத்துகொத்தாக செத்து மடிகின்றனர். அந்த வகையில் உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது. அதே போல் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மற்றொரு புறம் இத்தாலி மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை மட்டும் இந்த வைரஸ் பாதிப்பால் ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவே அதிகபட்ச ஒரு நாள் இறப்பாகும்.
எனவே இதனை மோசமான நாளாக இத்தாலி கருதுகிறது. உயிரிழப்பில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வைரஸ் உருவான சீனாவில் சுமார் 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,300 ஐ கடந்துள்ளது.