இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-04-06 20:14 GMT
லண்டன்,

சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ்,  உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் பரவியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயினால் இங்கிலாந்து நாட்டில் சுமார் 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்தில் பெரும் தலைவர்களையும் தாக்கியது.  இங்கிலாந்து  இளவரசர் சார்லஸ் வைரஸ் தொற்றுக்கு ஆளானார். சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து 55 வயதான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. 

உடனடியாக அவர் பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அவருக்கு நோயின் அறிகுறி தென்பட்டதால் இன்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது. இதனால், தற்போது அவர் சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகள்