தாய்லாந்து வணிக வளாகத்தில் புதுமை: வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்க ‘ரோபோ’ நாய்

தாய்லாந்து வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்க ‘ரோபோ’ நாய் பயன்படுத்தப்படுகிறது.

Update: 2020-06-08 22:45 GMT
பாங்காக், 

தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று பரவியதில் 58 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பாங்காக் நகரில் உள்ள சென்ட்ரல் வேர்ல்ட் மால் என்ற புகழ்பெற்ற வணிக வளாகத்தில், அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க புதுமையான தடுப்பு முறையை கையாண்டு வருகின்றனர்.இங்கு கே-9 என்ற ரோபோ நாய் மூலம், வருகிற வாடிக்கையாளர்களின் கைகளை நன்றாக சுத்தம் செய்வதற்கு சானிடைசர் திரவம் தரப்படுகிறது.

இந்த ரோபோ நாய், உற்சாகமாக ஒரு அசல் நாய் போலவே வலம் வருவது, அங்கு வருகிற குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரையில் அனைவரின் கவனத்தையும் கவர்வதாக அமைந்துள்ளது. இது 5-ஜி தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது.“இது, மக்கள் தங்கள் கைகளை சானிடைசர் திரவம் கொண்டு சுத்தம் செய்து விட்டு, பொருட்களை பார்த்து தெரிவு செய்வதற்கு வசதியாக உள்ளது. குறிப்பாக இப்போது கொரோனா வைரஸ் பரவி வருகிற இந்த காலகட்டத்தில் அதைத் தடுப்பதற்கு உதவும்” என்று பெட்ரா சக்திதேஜ்பானுபவந்த் என்பவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “ இந்த ரோபோ நாயை பொறுத்தவரையில் அது மிகவும் அழகாக இருக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள்” என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்