ஒரே மாதத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கபட்ட 12 வயது சிறுமி

12 வயது சிறுமியை ஒரேமாதத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இது குறித்து அறிந்த அதிகாரிகள் சிறுமியை மீட்டுள்ளனர்

Update: 2020-07-16 02:46 GMT
நைரோபி

கென்யாவை பொறுத்தமட்டில், 18 வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்வது என்பது குற்றச்செயலாகும்.தலைநகர் நைரோபியின் மேற்கே நரோக் பகுதியில் 12 வயது சிறுமிக்கு வரதட்சணையாக அந்த 51 வயது நபர் நான்கு மாடுகளை வழங்க முன்வந்துள்ளார். இதைதொடர்ந்து அவரை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமியின் தந்தை கட்டாயப்படுத்தியுள்ளார்.ஆனால் அங்கிருந்து தப்பிய அந்த சிறுமி 35 வயதான நபருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்.இதனிடையே தகவல் அறிந்து, சிறுவர் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

அந்த 51 வயது நபர் போலீசாருக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார். தற்போது தலைமறைவாகிவிட்ட தந்தை மற்றும் சிறுமியை திருமணம் செய்த இரண்டு நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கென்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வறுமை மற்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குழந்தை திருமண வழக்குகளை அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

சில குடும்பங்கள் பல நாட்களாக கடும் பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு அல்லது மூன்று மாடுகளை வரதட்சணையாகப் பெறுவதற்கான வாய்ப்பு அமையும்போது, இதுபோன்ற நடவடிக்கைகளில் பெற்றோர்கள் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

நரோக் கவுண்டியில் வசிக்கும் மாசாய் சமூகத்தினரிடையே வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்வது வழக்கமாக கண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.மாசாய் சிறுமிகள் பெற்றோர்களால் வருவாய் ஈட்டும் பொருளாகவே கருதப்படுகிறார்கள், மேலும் கால்நடைகளுக்கு ஈடாக தந்தையால் தெரிவுசெய்யப்பட்ட ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்.

அரசாங்கம் குறித்த பாரம்பரியத்தை முறியடிக்க முயன்று கொண்டிருக்கிறது, ஆனால் தற்போதுள்ள சட்டங்களை சரியாக அமுல்படுத்தாததால் இந்த குற்றங்கள் அதிகரிக்கிறது.

மேலும் செய்திகள்