ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; ராணுவ வீரர்கள் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தேசிய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2020-10-23 18:17 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது.  இதனை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  எனினும், இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், மறுபுறம் பயங்கரவாத தாக்குதல்களிலும் அந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.  இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் அநியாயம் ஆக கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் நிம்ரோஜ் மாகாணத்தின் காஷ்ரோட் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதனை மாவட்ட கவர்னர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுதவிர 6 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்று சிறைபிடித்து வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.  எனினும் தாக்குதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி எதுவும் கூறவில்லை.  ஆனால், தலீபான் பயங்கரவாதிகள் 24 மாகாணங்களில் தாக்குதல்களை விரிவுபடுத்துவது என்ற முடிவை எடுத்துள்ளனர் என ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் விமான படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் தலீபான்களின் பயங்கரவாத அமைப்பின் தளபதிகள் மட்டத்தில் இருந்த பலர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்