பயங்கரவாதத்துக்கு நிதியுதவி ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு
பயங்கரவாத செயல்பாடுகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
லாகூர்,
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவி நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தானை சேர்ந்த ஜமாத்- உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்.
மும்பை தாக்குதலை தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்க அறிவித்தது.
சர்வதேச அளவிலான நிர்ப்பந்தங்கள் காரணமாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக ஹபீஸ் சயீத் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்குகளில் ஹபீஸ் சையத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
4 பேருக்கு சிறை
இந்த நிலையில், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட மேலும் 2 வழக்குகளில் ஹபீத் சயீத் உள்பட 4 பேருக்கு பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டு நேற்று சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது.
இதில் ஹபீத் சயீத் மற்றும் அவரது ஆதரவாளர்களான ஜாபர் இக்பால், யாஹ்யா முஜாகித் ஆகியோருக்கு தலா 10½ ஆண்டு சிறை தண்டனையும், ஹபீசின் உறவினர் அப்துல் ரகுமானுக்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.