பிரான்ஸ் நாட்டில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் - பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அறிவித்துள்ளார்.

Update: 2020-12-04 11:34 GMT
பாரீஸ்,

உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகங்கள் சார்பில் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன. 

சமீபத்தில் ஜப்பான் நாட்டு அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த நிலையில் பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறும்போது, “பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதற்காக வருகிற நிதியாண்டில் 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படும். ஐரோப்பிய ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் ஒப்புதலுக்காக உள்ளதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் பல்வேறு மருந்து நிறுவனங்களிடம் இருந்து 200 மில்லியன் டோஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்