பூடானில் டிசம்பர் 23 முதல் 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்
பூடான் நாட்டில் டிசம்பர் 23ந்தேதி முதல் அடுத்த 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமலாகிறது.
திம்பு,
பூடான் நாட்டில் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களுக்கு இடையேயான இயக்கங்களுக்கு செவ்வாய் கிழமை காலையில் இருந்து தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டின் திம்பு, பாரோ மற்றும் லாமொய்ஜிங்கா உள்ளிட்ட நகரங்களில் புதிய வகை
கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், உள்ளூரில் புதிய வகை கொரோனா பரவலுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதனால் கடுமையான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என முடிவானது.
கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களுக்கு இடையேயான இயக்கங்களுக்கு செவ்வாய் கிழமை காலையில் இருந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 23ந்தேதியில் இருந்து 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
இந்த ஊரடங்கால் தொற்று பரவலை அரசால் கட்டுப்படுத்த முடியும். சமூகங்களுக்குள் பரவல் ஏற்படுவதும் குறையும். 7 நாட்கள் ஊரடங்கை நாம் முடிவு செய்த போதிலும், இதனை முன்னெடுத்து செல்வதற்கான வழிகளை தொற்று பரவல் தீர்மானிக்கும்.
கால்நடை தீவனம் உள்பட சரக்குகள், காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் இடையூறுகள் இருக்காது என அதற்குரிய அமைப்புகள் உறுதி செய்யும். பொதுமக்கள் தேவையான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.