கொரோனா பாதித்த இம்ரான் கான் ஊடக குழு கூட்டத்தில் பங்கேற்பு
கொரோனா பாதித்த இம்ரான் கான் ஊடக ஊடக குழுவினருடனான கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
லாகூர்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு (வயது 67) கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படுவதன் ஒரு பகுதியாக, இம்ரான் கான் அண்மையில் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவர் கொரோனா பாதுகாப்பு விதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டு ஊடக ஊடக குழுவினருடனான கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இதுபற்றிய புகைப்படம் ஒன்றை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி ஷிப்லி பராஸ் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
அந்த படத்தில், அறை ஒன்றில் 7 பேர் அமர்ந்து உள்ளனர். கான் உள்பட அனைவரும் முக கவசங்களை அணிந்து, சமூக இடைவெளி விட்டு அமர்ந்துள்ளனர்.
இதற்கு உடனடியாக டுவிட்டரில் சிலர் மறுபதிவிட்டு உள்ளனர். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதித்த பின்பு காணொலி கூட்டங்களில் கலந்து கொண்டார் என ஒருவர் சுட்டி காட்டினார்.
பாகிஸ்தானில் பாதிப்பு விகிதம் உயரும் சூழலில் மக்கள் இதனை வீட்டில் முயற்சித்து பார்க்க வேண்டாம் என்று ஒருபுறம் நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நம்முடைய பிரதமர் இம்ரான் கானிடம் இருந்து வந்துள்ள மோசமான எடுத்துக்காட்டு இது. கூட்டம் முக்கியமெனில், வீடியோ லிங்க் வழியே செயல்படுத்தி இருக்கலாம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் ஒழுங்குமுறைகளை மீறும் வகையில் புகைப்படம் உள்ளது என அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்.