நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் அந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
ஆக்லாந்து,
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவு பகுதியில் அமைந்துள்ள நகரம் கிரிஸ்பன். தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு பகுதியான அந்நகரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், கிரிஸ்பன் நகரின் வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து 193 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7.37 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
நியூசிலாந்தின் சில தீவுப்பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டு வருவதால் மக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.