டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு இல்லை: வடகொரியா அறிவிப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவது இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
பியாங்யாங்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க போவது இல்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது. கடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா பங்கேற்ற போது, தென்கொரியா- வடகொரியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இதன் காரணமாக நடப்பு ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் போது மீண்டும் பேச்சுவார்த்தை தொடரலாம் என தென்கொரியா எதிர்பார்த்து இருந்த நிலையில், வடகொரியா ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனாவை காரணம் காட்டி ஒலிம்பிக் தொடரை வடகொரியா புறக்கணித்து இருந்தாலும், வேறு சில அரசியல் காரணங்களும் இன்று சர்வதேச நோக்கர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
கொரோனா தொற்று பரவத்தொடங்கியதும் தனது நாட்டு எல்லைகளை முழுவதுமாக மூடிய வடகொரியா, தங்கள் நாட்டில் பாதிப்பே இல்லை எனக்கூறி வருகிறது. எனினும், வடகொரியாவின் கூற்று குறித்து சர்வதேச நிபுணர்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.