பாகிஸ்தானில் சீன தூதர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி
பாகிஸ்தானில் சீன தூதர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இஸ்லமபாத்,
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலோசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஓட்டலின் கார் பார்க்கிங் பகுதியில் நடைபெற்ற இந்த வெடி குண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
சீன தூதர் உள்பட சீனாவின் உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவினர் இந்த ஓட்டலில் தான் தங்கியிருந்துள்ளனர். எனினும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் குறிப்பிட்ட ஓட்டலில் இல்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு பயங்கரவாத செயல் என்று பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடந்த ஓட்டல் முழுவதும் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானி தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதல் எனவும் பாகிஸ்தானி தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.