கொரோனா பாதிப்பு: துபாய் சாலைகளில் டிஜிட்டல் விளம்பர பலகைகளில், இந்தியாவுக்கு ஆதரவான வாசகம்
கொரோனா பாதிப்பால் திணறி வரும் இந்தியாவுக்கு ஆதரவாக துபாய் சாலைகளில் உள்ள டிஜிட்டல் விளம்பர பலகைகளில் (#ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா) என வாசகம் எழுதப்பட்டுள்ளது.
துபாய்,
இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதில் பல்வேறு நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்த நிலையில் அமீரகமும் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி வருகிறது. இதனை அடுத்து இரு நாடுகளுடன் இருந்து வரும் நல்லுறவு மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் கடந்த வாரம் துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபாவில் இந்திய தேசிய கொடி ஒளிரவிடப்பட்டது.
இதனை அடுத்து நேற்று துபாயின் பிரதான ஷேக் ஜாயித் சாலையில் உள்ள டிஜிட்டல் விளம்பர பலகைகளில் #ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா என்ற ஹாஷ் டேக்குடன் எழுத்துகளும் ஒளிரவிடப்பட்டது. இந்தியாவை உறுதியுடன் இருங்கள் என அமீரகம் கூறுவதாக அந்த தகவல் அமைந்திருந்தது.