பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் மகள் கடத்தி சித்ரவதை; மருத்துவமனையில் அனுமதி
ஆப்கானிஸ்தான் அரசு இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் பேசி உள்ளது. குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை கேட்டு கொண்டுள்ளது.
இஸ்லாமாபாத்
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகெய்லின் மகள் சில்செலா அலிகெய்ல் இஸ்லாமாபாத்தில் நேற்று கடத்தப்பட்டார். இஸ்லாமாபாத்தில் ராணா மார்க்கெட் அருகே அவர் கடத்தப்பட்டு உள்ளார். பின்னர் அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார். சில்செலா தற்போது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. இந்த கொடூரமான செயலை கடுமையாக கண்டிக்கிறது என்று கூறி உள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள டுவிட்டில்
ஆப்கானிஸ்தான் தூதர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அரசியல் மற்றும் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது என கூறி உள்ளது.
ஆப்கானிஸ்தான் தூதரகம் மற்றும் தூதரகங்களின் முழு பாதுகாப்பையும், உறுதிப்படுத்த உடனடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசு இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் பேசி உள்ளது. குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் பிற நாட்டு தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் இது போல் தாக்குதலுக்கு உள்ளாவது இது முதல் முறை அல்ல. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதர்கள் கடந்த காலங்களில் இதுபோன்ற துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர். அங்கு இது ஒரு வகையான வழக்கமாக மாறியுள்ளது.