3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு
கடந்த 5 தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 டாலரை கடந்துள்ளது.
மும்பை,
உலக அளவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. பொருளாதார நடவடிக்கைகள் முழு வீச்சில் செயல்பட ஆரம்பித்து வருகின்றன. இதன் காரணமாக எரிபொருள் தேவை அதிகரிக்கத்தொடங்கி விட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயரத்தொடங்கியிருக்கிறது.
கடந்த 5 தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 டாலரை கடந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அதிக அளவாகும். தேவைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காததே விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரத்தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 பைசா அதிகரித்து 99 ரூபாய் 15 காசுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை 24 காசு உயர்ந்து 94 ரூபாய் 71 காசுக்கு விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதால் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.