தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம்: ஜி ஜின்பிங்
தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்,
சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பின் தைவான் தனி நாடாக உருவானது. ஆனால் இதை ஏற்காத சீனா, தைவான் தங்களது ஒருங்கிணைந்த பகுதி என கூறி வருகிறது. எனினும், தைவானில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியிருப்பது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன கிரேட் ஹால்லில் நடந்த நிகழ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாவது;- சீனா தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் எப்போதும் பாதுகாக்கும்.
தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும். நிச்சயமாக நான் அதை நிறைவேற்ற பாடுபடுவேன். அமைதியான முறையில் தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம்.
தைவானின் சுதந்திர பிரிவினைவாதம் தாய்நாட்டை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது” என்றார். சீன அதிபரின் பேச்சு குறித்து பதில் அளித்துள்ள தைவான், எதிர்காலம் மக்களின் கைகளில் உள்ளது என்றார்.